உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் - பங்கேற்க தயாராகுமாறு வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தல்
Mar 20 2020 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரேனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள் என வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என கேள்வி எழுந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஒலிம்பிக் போட்டிகளை ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்டு 9-ம் தேதிவரை, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறினார்.
இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனையின் முடிவில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள் என வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவே, ஒலிம்பிக் போட்டியை நடத்த, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து, ஜப்பானின் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டோ நவோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒலிம்பிக் தீபம் தற்போது டோக்கியோ நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.