இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி- 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
Feb 11 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடரை முழுமையாக கைப்பற்றி, இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, Tauranga-வில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், இந்திய அணி பேட்டிங் செய்யும்படி அழைத்தார். இதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 42 ரன்களும், அகர்வால், 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த முறையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து கேப்டன் கோலி ஏமாற்றினார். பொறுப்புடன் ஆடிய ஸ்ரோயஸ் அய்யர், ராகுல் ஆகியோர், நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். தொடர்ந்து மூன்றாவது அரைசதம் அடித்த ஸ்ரோயஸ் அய்யர், 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் தனது நான்காவது சதத்தை பதிவு செய்து 112 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மணீஷ் பாண்டே ஓரளவு கைக்கொடுக்க, 50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர்கள் கப்தில், நிக்கோலஸ் ஜோடி நல்ல தொடக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், கப்தில் 66 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய நிக்கோலஸ், 80 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். அபாரமாக ஆடிய கோலின் டி கிராண்ட்ஹோம், 28 பந்துகளில், 58 ரன்களை குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து அணி இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்தது. சர்வதேச கிரிக்கெட்டில், 31 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.