வண்ணமயத்துடன் கோலாகலமாக தொடங்கியது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி - முதல்நாள் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி
Oct 13 2014 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டித் தொடர், கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. முதல்நாள் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் போல, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் இதே வரிசையில் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஐ.எஸ்.எல். எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி தொடரும் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டீ கொல்கத்தா, மும்பை சிட்டி எப்.சி., புனே சிட்டி, சென்னையின் எப்.சி உட்பட 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. இதன் தொடக்க விழா, கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இசை விருந்து, வாணவேடிக்கையுடன் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடி, குழுமியிருந்த ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
ஐ.எஸ்.எல். போட்டியின் நிறுவனத்தலைவர் நிதா அம்பானி போட்டியை தொடங்கி வைத்தார். இதன் தொடக்கவிழாவில், மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி, இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, மும்பை சிட்டி எஃப்.சி. அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர், கொல்கத்தா அணி உரிமையாளர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்பின்னர் தொடங்கிய முதலாவது ஆட்டத்தில், கொல்கத்தா அட்லெடிகோ அணியும், மும்பை சிட்டி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 3 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. மும்பை அணியால் ஒரு கோல்கூட அடிக்க முடியாததால், கொல்கத்தா அணியிடம் 3-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த கால்பந்து போட்டித் தொடர் டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.