அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியலில், குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமார் பெயர் சேர்க்கப்படும் - டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு
Sep 18 2014 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, பிரபல குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமாரின் பெயர், அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தினால், ஆண்டுதோறும் அர்ஜூனா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல குத்துச்சண்டை வீரர் மனோஜ்குமாரின் பெயர், இந்த ஆண்டு அர்ஜூனா விருது பெறுவோர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.
கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மனோஜ்குமார், தனது பெயர் விடுபட்டது குறித்து அதிர்ச்சியடைந்தார். அவரைவிட குறைவான புள்ளிகள் பெற்றிருந்த மற்றொரு விளையாட்டு வீரரின் பெயர், பட்டியலில் இடம்பெற்றிருந்ததை அறிந்த மனோஜ்குமார், இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கினை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனோஜ்குமாருக்கு ஆதரவான முடிவை வழங்கியுள்ளது.
ஊக்கமருந்து பிரச்னையில் மனோஜ்குமார் சம்பந்தப்பட்டிருந்ததாக கருதியதால், அவரது பெயர் விடுபட்டதாக காரணம் தெரிவித்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், தற்போது, நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக்கொண்டு, அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியலில், மனோஜ்குமார் பெயர் இடம்பெறும் என்று அறிவித்துள்ளது.