கர்நாடகாவில், 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை
Dec 8 2019 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில், 15 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள், நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கர்நாடகாவில், காங்கிரஸ்-ஜனதா தள கூட்டணியில் இருந்து 15 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட சிவாஜி நகா், கே.ஆா்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், விஜயநகரா, கோகாக், அத்தானி, காகவாடா, எல்லாபுரா, கே.ஆர்.பேட்டை உள்ளிட்ட 15 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவுகள், கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது. ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ. உட்பட மொத்தம் 106 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி, இன்னும் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனினும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், பாரதிய ஜனதா அதிக சீட்டுகளைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.