உன்னாவ் நகரில் பாலியல் வன்கொடுமை : உயிரிழந்த இளம்பெண் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
Dec 8 2019 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தீயிட்டுக் கொளுத்தியதால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு, அம்மாநில அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில், தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்த இளம்பெண், விசாரணைக்கு செல்லும் வழியில், பலாத்கார குற்றவாளிகள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலால், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டார். இதில், 95 சதவீதம் காயமடைந்த அந்த பெண், 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு, உத்தர பிரதேச மாநில அரசு சார்பில், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு காசோலையை வழங்கிய பின், செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த அம்மாநில அமைச்சர் திரு. சாமி பிரசாத் மவுரியா, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்ணின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியது மட்டுமன்றி, அரசு சார்பில், வீடு கட்டித் தரப்படும் என்றும் கூறினார்.