ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : அமலாக்கத்துறை கட்டுபாட்டில் ப.சிதம்பரத்தை விசாரிக்க நாளை தீர்ப்பு
Oct 14 2019 8:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுமீது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா அந்நிய முதலீட்டை பெற முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், அதற்கு கைமாறாக மகனுடைய நிறுவனங்களில் முதலீடு பெற்றதாகவும், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில், சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி வரை அவரை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ப.சிதம்பரத்தை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்காக ப.சிதம்பரம் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை சார்பில், மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவும், ப.சிதம்பரம் தரப்பிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் ஆஜராகி வாதாடினர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாளை தீர்ப்பளிப்பதாகக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.