பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீதான பாலியல் புகார் - பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல்
Sep 18 2019 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் சின்மயானந்தாவை உடனடியாக கைது செய்யாவிட்டால், தான் தீக்குளித்து தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை என அவர் மீது பாலியல் புகார் அளித்த சட்டக்கல்லூரி மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்துக்கு சொந்தமான கல்லூரியில் முதுநிலை சட்டப் படிப்பு படித்து வந்த இளம் பெண் ஒருவர், சின்மயானந்த் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரளித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்டதாகக்கூறி சின்மயானந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த சனிக்கிழமை, பாதிக்கப்பட்ட மாணவி 43 வீடியோக்கள் அடங்கிய பென் ட்ரைவை சிறப்பு விசாரணைக்குழுவிடம் அளித்தார். இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நீதிபதி முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்தார். சின்மயானந்தாவிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் அளித்தும், இதுவரை அவரை கைது செய்யாததால், தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துள்ளார். தான் வாக்குமூலம் அளித்து இரு தினங்கள் ஆகியுள்ள நிலையில் அரசு மவுனம் காப்பதாகவும், ஒருவேளை தான் உயிரோடிருப்பதை அரசு விரும்பவில்லை என்றால், தீக்குளித்து உயிரை விடத்தயாராக இருப்பதாகவும், அம்மாணவி தெரிவித்துள்ளார்.