கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரித்துவந்த நீதிபதி சந்தான கவுடர் விலகல் - ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என விளக்கம்
Sep 17 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த 3 நீதிபதிகள் அமர்வில் இருந்து, நீதிபதி சந்தான கவுடர் விலகினார்.
கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கொறடா உத்தரவு பிறப்பித்தும் 14 எம்.எல்.ஏக்கள் அவைக்கு வராமல் புறக்கணித்தனர். இதேபோல, 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதையடுத்து அப்போதைய சபாநாயகர் திரு. ரமேஷ்குமார், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 17 பேரையும் தகுதிநீக்கம் செய்தார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவில், சபாநாயகரின் ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை ரத்து செய்து, தங்களை எம்.எல்.ஏ.க்களாக நீடிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, சந்தான கவுடர் மற்றும் அஜய் ரஸ்தோகி அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சந்தான கவுடர், தான், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி விசாரணையிலிருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில், விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.