கர்நாடக மாநிலத்தில் தொடரும் அரசியல் நெருக்கடி - நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு - பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை
Jul 8 2019 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி தொடரும் நிலையில், நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் திடீரென காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் அலுவலகத்தில் நேற்று தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக மாநில சட்டப்பேரவை சபாநாயகர் திரு. ரமேஷ்குமார், ராஜினாமா கடிதங்கள் மீது நாளை முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிப்பது குறித்து, கர்நாடக அமைச்சர் சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் தேவகவுடாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவிற்கு பின்னால் பா.ஜ.க.வே உள்ளது என்றும், இது "ஆபரேஷன் கமலா" வின் செயல்பாடு என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனால் அரசிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும், ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதனை திரும்ப பெற வலியுறுத்தி, மும்பையில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள விடுதி முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என சட்டமன்றக் கட்சித்தலைவர் திரு.சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் திரு.கே.சி. வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.தினேஷ் குண்டு ராவ் இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.