ஆதார் விபரங்களுடன் கூடிய மக்கள் தொகை பதிவேடுகளை 'டிஜிட்டல்' மயமாக்கும் வகையில் புதிய மென்பொருள் அறிமுகம்
Aug 11 2018 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பிறப்பு, இறப்பு, நோய், பொருளாதாரம், மக்கள் தொகை விபரம், சமுதாய வாழ்க்கை உள்ளிட்ட விவரங்களும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெறுகின்றன. இதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள், திட்டங்களை தயாரிக்கின்றன. கடந்த, 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழக மக்கள் தொகை, 7 கோடியே 21 லட்சமாக இருந்தது. ஆதார் விபரம் பதிவு செய்யப்பட்டதால், 2016ல், மக்கள்தொகை கணக்கெடுப்பு திருத்தப்பணி நடைபெற்றது. ஆனால் சட்டசபை தேர்தல் காரணமாக, அப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மக்கள் தொகை விபரங்களை, திருத்தம் செய்து, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மக்கள் தொகை பதிவேடுகள் தயாரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட வாரியாக, வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி தொடங்கியுள்ளது. மக்கள் தொகை பதிவேடு விபரங்களை, 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்ய புதிய மென்பொருள் ஒன்று வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி வரும் 20ம் தேதி தொடங்கி, 90 நாட்களில் நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நவீனமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.