நாட்டின் பாதுகாவலர் எனக் கூறிக்கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்கு
Jul 20 2018 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடி மீது நேரடியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடுத்தார். பிரதமர் திரு. மோடியால், தன்னை நேரடியாக பார்த்து பேச முடியாது என தெரிவித்த ராகுல், அவரிடம் உண்மை இல்லாததே அதற்கு காரணம் என கூறினார். ராகுலின் பேச்சினால் மக்களவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்குதேசம் எம்.பி. ஜெய்தேவ் கல்லா, பா.ஜ.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். திரு. மோடி வெற்று வாக்குறுதிகளை அளித்து ஆந்திராவை ஏமாற்றியுள்ளதாகவும், ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்தது அநியாயம் என்றும் தெரிவித்த அவர், ஆந்திராவுக்கு தனி மாநில அந்தஸ்த்து கொடுப்பதாக சொல்லி ஏமாற்றிய பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் ஆந்திர மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார். ஜெய்தேவ் கல்லாவின் பேச்சுக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடி மீது நேரடியாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டதாகவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அவதியடைந்ததாகவும், ராகுல் தெரிவித்தார். மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்ற வாக்குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பிய ராகுல், அமித் ஷா மகன் ஜெய்ஷா ஊழல் விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே பிரதமர் செயல்படுவதாகவும், திரு. மோடியின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை என்றும் ராகுல் தெரிவித்தார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல், சீனாவிடம் திரு. மோடி ஆக்கப்புர்வமான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், சீனாவிடம் இந்தியா வளைந்து கொடுத்து போவதாகவும் கூறினார். மேலும், காவல்காரனாக இருப்பேன் எனக்கூறிய பிரதமர் பங்குதாரராக மாறிவிட்டார் என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். திரு. மோடியின் முகத்தில் சிரிப்பை கண்டதாகவும், ஆனால் அந்த சிரிப்பில் பதற்றம் தெரிவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். தன் கண்களை பார்த்து பேச திரு. மோடியால் முடியாது எனக்கூறிய ராகுல், அவரிடம் உண்மை இல்லாததே அதற்கு காரணம் என தெரிவித்தார். ராகுலின் பேச்சுக்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளி ஏற்பட்டு மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.