நீதியை காக்க உரத்த குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தைக் காக்கும் முக்கிய தூண்கள் : உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகய்
Jul 13 2018 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதியை காக்க உரத்த குரல் எழுப்பும் நீதிபதிகளும், சுதந்திரமான பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தைக் காக்கும் முக்கிய தூண்கள் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு பெற்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அப்போது நீதித்துறையில் சீர்திருத்தம் அல்லது புரட்சி தேவை என்று அவர் வலியுறுத்தினார். மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குவது நீதித்துறை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதற்கு பெருமை படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கலகக் குரல் எழுப்பும் நீதிபதிகளாலும், சுதந்திரமான பத்திரிகையாளர்களாலும் தான் ஜனநாயகம் காக்கப்படுவதாகவும் நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 12ம் தேதி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கோகய், செல்லமேஸ்வரர், எம்.பி.லோகூர், மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி செய்தியாளர்களை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.