வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி - உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசுவதா என மோடிக்கு சிவசேனா கண்டனம்
Apr 21 2018 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்ற பிரதமர் திரு. நரேதிர மோடி அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார்.
காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மாநாட்டில் கலந்து கொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய ராணி எலிசபெத், காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தனக்கு பிறகு இளவரசர் சார்ல்ஸ் தலைமை தாங்குவார் எனத் தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்தார். மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். தனிவிமானம் மூலம் பெர்லின் சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கெலை, மோடி சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து, இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவுகள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறை சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார்.
சிவசேனா கட்சி கடும் கண்டனம்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, முக்கிய உள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள சிவசேனா கட்சி, பிரதமருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
நாட்டின் ஜம்மு காஷமீர் மாநிலத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும், கருப்பு பணம் மற்றும் ஊழல்கள் குறித்து, லண்டனில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதற்கு சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில் இது குறித்து எழுதப்பட்டுள்ளது. சர்ச்சைக்குறிய, மிகவும் உணர்ச்சிமிக்க உள்நாட்டுப் பிரச்னைகளை வெளிநாடுகளில் பேசுவதால் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் வேறொரு நாட்டில் தனது தேசத்தில் நடைபெறும் பாலியல் குற்ற சம்பவங்கள் குறித்து பேசுவது சரியா? என்றும், இந்தியா குறித்து ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற தவறான பிம்பத்தை எதற்காக வெளிநாடுகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா இங்கிலாந்தில் தான் பத்திரமாக உள்ளார் என்றும், பிரதமர் திரு. மோடி இது போன்ற விஷயங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் கையுடன் திரும்புகிறார் என்றும் சிவசேனா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது.