ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி - 14-வது நாளாக அவை நடவடிக்கைகள் முடக்கம்
Mar 22 2018 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் 14-வது நாளாக, அவை நடவடிக்கைகள் முடங்கின. மக்களவை நண்பகல் வரையும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், கேள்வி நேரத்தை நடத்தவிடாமல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையின் மையப்பகுதிக்குச் சென்று, மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில், மத்திய அரசு மீது, அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால், மக்களவையை சபாநாயகர் திருமதி. சுமித்ரா மகாஜன், நண்பகல் வரை ஒத்திவைத்தார். இதே காரணங்களால் மாநிலங்களவையிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் 14-வது நாளாக முடங்கியுள்ளன.
இதனிடையே, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கைகளில் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.