மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தால், நாடாளுமன்றம் 14-வது நாளாக பாதிப்பு : எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Dec 7 2016 9:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தால், நாடாளுமன்றம் 14-வது நாளாக பாதிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கூட்டம் தொடங்கியது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வழக்கம்போல், ரூபாய் நோட்டு பிரச்சினை குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த விவகாரத்தில் பிரதமர் திரு.நரேந்திரமோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவையில் பெரும் கூச்சல்-குழப்பம் நிலவியது. இதையடுத்து, நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் மீண்டும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் ரூபாய் நோட்டு விவகாரம் எதிரொலித்தது. இப்பிரச்சினை பற்றி தாங்கள் விவாதிக்க தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அதற்கு தயங்குவதாகவும் நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட கூச்சல்-குழப்பம் காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.