மகதாயி நதிநீரைப் பங்கிடுவதில் மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுடன் சர்ச்சை - நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழுஅடைப்புப் போராட்டம் - தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தம்
Jul 30 2016 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகதாயி நதிநீர் பங்கீடு தொடர்பாக, கர்நாடகா மாநிலத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், தமிழகத்திலிருந்து அம்மாநிலத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களில் பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக மூன்று மாநிலங்கள் இடையே பிரச்சினை நீடிக்கிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள மகதாயி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் வடகர்நாடகாவில் உள்ள தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க மகதாயி நதியில் இருந்து 7 புள்ளி ஐந்து ஆறு டி.எம்.சி நீரை கர்நாடகாவுக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தது. இதை விசாரித்த மகதாயி நடுவர் மன்றம் சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தார்வார், கதக், பெலகாவி, பாகல் கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், விவசாயிகளும் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னடர் அமைப்புகளின் கூட்டமைப்பு மற்றும் விவசாய சங்கங்கள் உள்ளிட்டவை அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி, அம்மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு கர்நாடக வணிகர் சங்கம், போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து முழு அடைப்பு போராட்டத்தின் போது அசம்பா விதங்களை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்பட்டு வந்த போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.