லலித்மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவர இங்கிலாந்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய அரசு தகவல்
May 27 2016 9:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேடு விவகாரத்தில் சிக்கி, இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கும் அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவரும் வகையில், இங்கிலாந்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக பணவருவாய் கொண்ட இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். அமைப்பின் தலைவரான லலித்மோடி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றினர். இதனால் நெருக்கடிக்கு உள்ளான லலித்மோடி, கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். இந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும், லலித்மோடி ஆஜராகவில்லை. இதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, லலித்மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் வகையில் இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. லலித்மோடியை கைது செய்ய மத்திய அமலாக்கத்துறை ஏற்கெனவே சர்வதேச போலீசான இன்டர்போலையும் அணுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.