வியாபம் முறைகேடு தொடர்பாக அனைத்து புகார்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்னும் 8 வாரங்கள் தேவைப்படும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Jul 31 2015 6:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வியாபம் முறைகேடு தொடர்பாக அனைத்து புகார்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்னும் 8 வாரங்கள் தேவைப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வுகளில் பெருமளவு முறைகேடு நடைபெற்றதாகவும், இதன்மூலம் பலகோடி ரூபாய் லஞ்சப்பணம் பரிமாறப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு குறித்து சி.பி.ஐ. பிரமாணப் பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளது. வியாபம் முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள 8 வாரம் தேவைப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும், எனவே காவல்துறையில் பல்வேறு நிலைகளிலும் உள்ள 307 அதிகாரிகள், வழக்கை விசாரிக்க தேவைப்படுவதாகவும், அதனை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் சி.பி.ஐ. தனது பிரமாணப் பத்திரத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, வியாபம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை குறித்த கால அவகாசம் பற்றி தெரிவிக்கும்படி சி.பி.ஐ. அமைப்பை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது. இதனையொட்டி, சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் வியாபம் முறைகேடு குறித்த புகார்களை எடுத்துக் கொள்ள 8 வாரங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.