மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்ட்ட யாகுப் மேனன் நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Jul 30 2015 6:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்ட்ட யாகுப் மேனனுக்கு இன்று நாக்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில், 257 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட யாகுப் மேனனுக்கு மரண தண்டனை விதித்து, மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து, மேமன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததோடு, மரண தண்டனையை உறுதிசெய்தது.
அடுத்தடுத்து யாகுப் மேனன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனு, குராடிவ் மனு ஆகியனவும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், யாகுப் மேனன், குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.
கருணை மனு மற்றும் சட்டரீதியான அனைத்து தீர்ப்புகளும் யாகுப் மேனனுக்கு எதிராக அமைந்ததால், அவரை இன்று, மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூர் சிறையில், தூக்கிலிடுவதற்கான வாரண்டை மும்பை தடா நீதிமன்றம் பிறப்பித்தது.
இதனிடையே, 2 வார காலத்திற்கு தண்டனையை தள்ளி வைக்கும்படி அளிக்கப்பட்ட மனுவை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான 3 பேர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் முன்பு இன்று அதிகாலை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவையும் நிகராகரித்த நீதிபதிகள் மேமனின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தனர். இதனையடுத்து, இன்று காலை நாக்பூர் சிறையில் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
இதனையடுத்து, மஹாராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாக்பூர் சிறைப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.