நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் - உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
Jul 6 2022 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நபிகள் நாயகம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய திருமதி. நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருமதி. நுபுர் சர்மாவின் பேச்சால் நாடே தீக்கிரையாகிவிட்டதாகவும், நாட்டில் தற்போது நிகழும் அசம்பாவித சம்பவங்களுக்கு அவரே காரணம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 15 பேரும், அகில இந்திய ஆட்சிப்பணியின் முன்னாள் அதிகாரிகள் 77 பேரும், முன்னாள் ராணுவ அதிகாரிகள் 25 பேரும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.வியாஸ், கேரள உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான திரு.ஆனந்த் போஸ், திரு.கோபாலன், முன்னாள் டிஜிபிக்களான திரு.எஸ்.பி.வைத், திரு.பி.எல்.வோரா, முன்னாள் ராணுவ அதிகாரிகளான திரு.வி.கே.சதுர்வேதி, திரு.எஸ்.பி.சிங் உள்ளிட்ட 117 பேர் கையொப்பமிட்டுள்ளனர். திருமதி. நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தெரிவித்துள்ள துரதிருஷ்டவசமான கருத்துகள் நீதிமன்ற சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் உகந்ததாக இல்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நீதி பரிபாலன அமைப்பில் அகற்ற முடியாத வடுவை ஏற்படுத்தி விட்டதாகவும், உதய்பூரில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும் தங்கள் கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.