டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்
Jan 23 2022 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி அமைச்சர் திரு.சத்யேந்திர ஜெயினை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக, டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் திரு.சத்யேந்திர ஜெயினை கைது செய்ய அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு சத்யேந்திர ஜெயினை ஏற்கனவே இரண்டு முறை அமலாக்கத்துறை சோதனையில் சிக்க வைத்தாகவும், அதில் எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தார். இதுபோன்ற சோதனைகளைக் கண்டு, பஞ்சாப் முதல்வரைப் போல தாங்கள் அழ மாட்டோம் என்றும், ஏனெனில் அச்சப்படும் அளவுக்கு தாங்கள் எந்தவித தவறுகளும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். சத்யேந்திர ஜெயின் மட்டுமல்லாமல், தான் உள்பட அனைத்து அமைச்சர்களையும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினாலும் பயமில்லை என்றும், தாங்கள் அந்த சோதனைகளை வரவேற்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் நேரத்தில்தான், மத்திய ஏஜென்சிகள் மிகவும் வேகமாக வேலை செய்கின்றன என்றும் டெல்லி முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.