18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற பெருமையை பெற்றது உத்தரகாண்ட் மாநிலம் - நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற சிறப்பை பெற்றதால் மகத்தான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து
Oct 19 2021 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டிலேயே முதல் மாநிலமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற பெருமையை உத்தரகாண்ட் மாநிலம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது என்று பிரதமர் திரு.மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு எதிராக, 18 வயது மேற்பட்டோருக்கு கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக தற்போதுவரை 98 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 411 டோஸ், கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87 லட்சத்து 41 ஆயிரத்து 160 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட 100 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலமாக உத்தரகாண்ட் உருவாகியுள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் திரு. புஷ்கர் சிங் தாமி அதிகாரப்பூர்வதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உத்தரகாண்டின் இந்த சாதனை மிகவும் முக்கியமானது என்று பிரதமர் திரு. மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசித் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் தான் உறுதியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.