கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை - 31 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு
Oct 19 2021 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேரா சச்சா சவுதா ஆசிரம மேலாளர் கொலை வழக்கில் பிரபல சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமத்தை பிரபல சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் நடத்தி வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து அவர் தகவல் வெளியிட்டதால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் சாமியார் குர்மீத் ராம்ரஹீம் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் குர்மீத் ராம் ரஹீமிற்கு 31 லட்சம் ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண் துறவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்திரிகையாளர் கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.