மஹாராஷ்ட்ராவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு - கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழையால் நிரம்பும் நீர்நிலைகள்
Jul 23 2021 12:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை நாளுக்கு நாள் தீவிரமடைவதால் தானே, பால்கர், ரத்தினகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆறுகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் 7 ஏரிகளில் 4 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளம் பாதித்த கடலோரப் பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன், கடற்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மும்பை புறநகர் பகுதியான பிவாண்டியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்தவர்களை தேசிய பாதுகாப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். புனேவின் கடக்வஸ்லா அணை நிரம்பி வழிவதால், அப்பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான பீமாசங்கர் கோயிலும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனிடையே, ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெலங்கானாவிலும் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால், ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. கடும் வெள்ளத்திலும், சில மீனவர்கள் நிர்மல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் கரைதிரும்ப வலியுறுத்தப்பட்டுள்ளனர். குமரம் பீம், ஜக்தியல், வாரங்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கர்நாடகாவிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. காளி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்வார் பகுதியில் உள்ள கட்ரா அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 40 ஆயிரம் கடி அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.