ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவு - டெல்லி அரசின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
Apr 22 2021 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தக் கூடாது என, மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வரும் நிலையில், டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லிக்கு ஆக்சிஜன் ஏற்றி வரும் வாகனங்களை, மாநில எல்லைகளில், பா.ஜ.க. ஆளும் ஹரியானா, உத்தர பிரதேச அரசுகள் தடுத்து நிறுத்துவதாக, அம்மாநில அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தில், ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும், 24 மணி நேரமும் ஆக்சிஜன் வாகனங்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதித்துள்ளதை தவிர, தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் வினியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது என்றும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.