இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம் : டெல்லியில் பலத்த பாதுகாப்புக்கிடையே அணிவகுப்பு நிகழ்ச்சி
Jan 25 2021 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவின் 72-வது குடியரசு தின விழா, நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்திய குடியரசு தின விழா, டெல்லியில் நாளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய-பங்களாதேஷ் நட்புறவை பிரதிபலிக்கும் வகையில், முதல்முறையாக, பங்களாதேஷ் நாட்டின் முப்படை வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ வல்லமையைப் பறைசாற்றும் வகையில், T-90 வகை Tank-கள், பிரம்மோஸ் ஏவுகனைகள், அதிநவீன Pinaka பல்முனை ராக்கெட்கள், மின்னணு ராணுவத் தளவாடங்கள், வான் பாதுகாப்புக்கான நவீன ஆயுதங்கள் ஆகியன குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கின்றன. முப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரும் கம்பீரமாக அணிவகுத்துச் செல்வார்கள். தீவிரவாத அச்சுறுத்தல், விவசாயிகளின் தொடர் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டெல்லி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவ வீரர்கள், துணை ராணுவப்படையினர், டெல்லி காவல்துறையினர், அதிரடிப் படை வீரர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.