ஏடிஎம்-ல் ரொக்கப் பணம் செலுத்தினால் இனி கட்டணம் - மூத்த குடிமக்களுக்கு மட்டும் விலக்கு
Oct 21 2020 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏ.டி.எம். மூலம் ரொக்கப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் பெரும்பாலான வங்கிகள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன. வங்கிகளின் இந்த முடிவால், சிறு வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விடுமுறை நாட்கள் மற்றும் வங்கி வேலை நேரம் அல்லாத தருணங்களில், ஏ.டி.எம். மூலம் ரொக்கப்பணம் செலுத்துவதற்கு, தனியார் வங்கிகள் கட்டணம் வசூலித்து வருகின்றன. ஆக்சிஸ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 50 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, வரும் ஒன்றாம் தேதி முதல், வாடிக்கையாளர்களிடமிருந்து இத்தகைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. வங்கி விடுமுறை நாட்களிலும், மாலை 6 மணி முதல் காலை 8 வரையிலான நேரத்திலும், ஏ.டி.எம். மூலம் ரொக்கப் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கட்டணம், அடிப்படை சேமிப்புக் கணக்கு, ஜன் தன் கணக்கு, மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிகளின் இத்தகைய முடிவுகளால் தாங்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவதாக சிறு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.