பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா : ஜனவரி 20-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்
Jan 18 2020 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாஜக தேசிய தலைவராக, அக்கட்சியின் செயல் தலைவர் திரு. ஜே.பி.நட்டா, வரும் 20-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக தேசிய தலைவராக உள்ள திரு. அமித்ஷா, கடந்த 4 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்தது. இருப்பினும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் காரணமாக, தேர்தல் முடியும் வரை, அவரே தலைவராக தொடர்ந்தார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சராகப் அமித்ஷா பொறுப்பேற்றார். இதையடுத்து, அக்கட்சியின் செயல் தலைவராக, திரு.ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தால், 21-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தி, புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவர். ஆனால், பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலில், செயல் தலைவர் ஜே.பி.நட்டா மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும், இதன் மூலம், அவர், போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.