செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை இன்னும் 23 நாட்களில் மங்கள்யான் சென்றடையும் என இஸ்ரோ தகவல் - 300 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்தது
Sep 2 2014 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்திய மங்கள்யான் விண்கலம், தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்துள்ளது. அடுத்த 23 நாட்களில் மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையை அடைந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி மங்கள்யான் விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. ராக்கட் மூலம் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், இதுவரை 62 கோடியே 20 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளது. விண்வெளி பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்துள்ள மங்கள்யான் விண்கலத்தின் அனைத்து கருவிகளும் துல்லியமாக செயல்பட்டு வருவதாகவும், இன்னும் 23 நாட்களில் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையை அடைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வினாடிக்கு சுமார் 22 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மங்கள்யான் விண்கலம், மொத்த தூரமான 68 கோடி கிலோ மீட்டரைக் கடந்து, வரும் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையவுள்ளது. செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை விண்கலம் நெருங்கும்போது அதில் உள்ள திரவ எரிபொருள் என்ஜினை இயக்கும் சவாலான பணியை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.