மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு
Apr 24 2014 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு மஹாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் உள்ள 77 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட வாக்குப்பதிவை போலவே, மஹாராஷ்ட்ராவில் உள்ள 19 மக்களவைத் தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், ராஜஸ்தானில் 4, உத்தரப்பிரதேசத்தில் 12, சட்டீஸ்கர், பீஹாரில் தலா 7 தொகுதிகள் என மொத்தம் 10 மாநிலங்களில் உள்ள 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலத்தில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகின்றனர். கவுஹாத்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில், நீண்ட வரிசையில் நின்று ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்கு சாவடியில் தொழில்அதிபர் அனில் அம்பானி வாக்களித்தார். இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் சமாஜ்வாதி கட்சித் தலைவரான திரு.முலாயம்சிங் யாதவ் வாக்களித்தார்.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் தனது கட்சித் தொண்டர்களுடன் சென்று வாக்களித்தார்.