வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீதான புலன் விசாரணை குறித்த நிலவர அறிக்கை, அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் : சிறப்பு புலனாய்வுக்குழு அறிவிப்பு
Oct 31 2014 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் மீதான புலன் விசாரணை குறித்த நிலவர அறிக்கை, அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கிகள் உட்பட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில், கருப்புப் பணத்தை பதுக்கிய, 627 பேர் கொண்ட இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சீலிடப்பட்ட உறையில் வைத்து, நீதிபதிகள் முன்னிலையில் இப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. கருப்புப்பணத்தை மீட்பது குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக்குழுவிடம் அப்பட்டியல் சமர்ப்பிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், கருப்புப்பண புலன்விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சிறப்புப் புலனாய்வு குழு அடுத்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவின் துணைத்தலைவரான முன்னாள் நீதிபதி திரு.அரிஜித் பசயாத் புலன் விசாரணை தொடர்பான நடைமுறைகளை தாங்கள் தொடங்கிவிட்டதாகவும், உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி அடுத்த மாத இறுதிக்குள் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வருவாய்த்துறை செயலாளர் திரு.சக்திகந்தா தாஸ், கருப்புப்பணம் பதுக்கல் தொடர்பான சந்தேகமோ அல்லது புகாரோ எழும்பட்சத்தில் உடனடியாக அது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதிபடக் கூறியுள்ளார்.