மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது கன்னட நடிகை மைத்திரி குற்றச்சாட்டு - திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார்- வழக்குப்பதிவு
Aug 28 2014 11:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் தன்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டதாக கன்னட நடிகை மைத்திரி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்தப் புகாரை அமைச்சர் மறுத்துள்ளார்.
மத்திய ரெயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும், குடகு மாவட்டம் சோமவார்பேட்டை, குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் நேற்று காலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது நடந்து முடிந்த சில மணிநேரத்தில் கன்னட நடிகை மைத்திரி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கார்த்திக்குடன் ஏற்பட்ட நட்பு பின்னர், காதலாக மாறியதாகவும் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி மங்களூரில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். தற்போது என்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் கார்த்திக் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக கூறினார்.
கார்த்திக்கும், நடிகை மைத்திரியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் எதையும் நடிகை மைத்திரி வெளியிடவில்லை. இந்நிலையில் பெங்களூர் ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் மீது நடிகை மைத்திரி புகார் கொடுத்தார். அந்த புகாரில் தெய்வத்தை சாட்சியாக வைத்து தன்னை திருமணம் செய்த கார்த்திக், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் நடிகை மைத்திரியின் குற்றச்சாட்டை மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவும், அவரது மகன் கார்த்திக் கவுடாவும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.