ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில், கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் முறைகேடாக கைமாறிய விவகாரத்தில், ஆ.ராஜா, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராஜா, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இமாலய ஊழல் நடைபெற்றதை மத்திய தலைமை தணிக்கைக்குழு கண்டறிந்தது. அது குறித்து ஏற்கெனவே, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு, ஆ.ராஜா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தது. அதனடிப்படையில், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட ஆ.ராஜா, கனிமொழி இருவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில், ஒரு பகுதியான 214 கோடி ரூபாய் முறைகேடாக கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு கைமாறிய விவகாரம் பூதாகரமாக வெளிப்பட்டது. இந்த பணப் பரிவர்த்தனை குறித்து, உச்சநீதிமன்ற உத்தரவின்கீழ், அமலாக்கப்பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி திரு. O.P.சைனி முன்னிலையில் 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்தக் குற்றப்பத்திரிகையில், ஆ. ராஜா, கருணாநிதி மனைவி தயாளு, மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாகிகள் அமிர்தம், சரத்ரெட்டி, தொழிலதிபர்கள் ஷாகித் பல்வா, கரீம் மொரானி, வினோத் கோயங்கா, ஆஷிஷ் பல்வா, ராஜீவ் அகர்வால் உள்ளிட்ட 10 பேர் மற்றும் கலைஞர் டி.வி., ஸ்வான் டெலிகாம் உள்ளிட்ட 9 நிறுவனங்களின் நிர்வாகிகள் 9 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அதில், குற்றவாளிகளான இவர்கள் குற்றம் புரிந்திருப்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட இந்தக் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அது குறித்து கடந்த அமர்வின்போது கருத்து தெரிவித்த நீதிபதி திரு.O.P.சைனி, தாம் குற்றப்பத்திரிகையை கவனமாக பரிசீலித்ததாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் மீதான குற்றத்தை நிரூபிக்கப் போதுமான அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது என தாம் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கூடியபோது, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராஜா, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, உள்ளிட்ட 19 பேர் மீதும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்றும் நீதிபதி அறிவித்தார்.