ஜம்மு-காஷ்மீர் எல்லையில், பயங்கர ஆயுதங்களுடன் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக தகவல் - பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகள் 4 பேர் பலி
Sep 20 2014 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நிலையில், பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 4 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பயன்படுத்தி, இந்தியாவுக்குள் ஊடுருவல் நடத்த 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால் இந்திய ராணுவம் முழு உஷார் நிலையில் இருந்ததால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை என்றும் ராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சுப்ரதா ஷாஹா தெரிவித்தார். எனினும், தீவிரவாதிகள் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நடமாடி வருவதாகவும், அவர்களை ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் தாங்தார் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, சத்தீஷ்கர் மாநிலம் ஜக்தால்பூர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே கொட்டும் மழையில் 3 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் சில தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.