டெல்லியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு - மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
Nov 1 2014 6:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் இடைத்தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், 1984-ம் ஆண்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதையொட்டி, தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவையில் காலியாகவுள்ள கிருஷ்ணாநகர், மெஹ்ரோலி மற்றும் துக்ளகாபாத் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த சீக்கியர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால், விளக்கம் கோரி தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 3-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள இழப்பீடு மொத்தம் 3,325 குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 166 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.