கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிக்கு, 214 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் - ஆ. ராஜா, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் 6-ம் தேதி வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
Jul 22 2014 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிக்கு, 214 கோடி ரூபாய் முறைகேடாக கைமாறிய விவகாரம் தொடர்பான வழக்கில், ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு, வரும் 6-ம் தேதி வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில் லாபம் அடைந்த நிறுவனங்கள் அதற்கு கைமாறாக, கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கின. இதுகுறித்து மத்திய அமலாக்கத்துறை, கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ஆ.ராஜா, கருணாநிதி மகள் கனிமொழி, மனைவி தயாளு மற்றும் கலைஞர் டி.வி. நிர்வாகி சரத்ரெட்டி உள்ளிட்ட 10 பேர் மீதும், 9 நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. தயாளு நீங்கலாக குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவரும் கடந்த மாதம் 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர், அவர்கள் அனைவரும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால், ஜாமீன் அளிப்பதற்கு அமலாக்கப்பிரிவு எதிர்ப்புத் தெரிவித்தது. இந்நிலையில், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று முடிவடைந்த நிலையில், வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு. ஓ.பி. சைனி அறிவித்துள்ளார். மேலும், நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் கருணாநிதியின் மனைவி தயாளுவுக்கு, நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.