ஆந்திராவில், டைட்டானியம் தாதுவை பிரித்தெடுப்பதற்கான உரிமம் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 113 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கிய விவகாரம் : காங்கிரஸ் எம்.பி.யை கைது செய்ய சி.பி.ஐ. நடவடிக்கை
Apr 24 2014 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவில், டைட்டானியம் தாதுவை பிரித்தெடுப்பதற்கான உரிமம் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 113 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கிய காங்கிரஸ் எம்.பி., கே.வி.பி. ராமச்சந்திர ராவை கைது செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பராக இருந்த கே.வி.பி. ராமச்சந்திர ராவ், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ஆந்திராவில் டைட்டானியம் தாதுவை பிரித்தெடுப்பதற்கான உரிமம் பெறுவதற்காக ராமச்சந்திர ராவ், அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து 113 கோடியே 17 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், இந்த லஞ்சப் பணத்தை மத்திய மற்றும் ஆந்திர மாநில அதிகாரிகளுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், உரிமம் பெற்றுக் கொடுப்பதற்காக ராமச்சந்திர ராவும், அமெரிக்க நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவின் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பு சி.பி.ஐ.க்கு கடிதம் அனுப்பியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் ராமச்சந்திர ராவ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பான ஆவணங்கள், இந்தியத் தூதரகம் மூலம் முறைப்படி விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ராமச்சந்திர ராவை கைது செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதத்தை ஆந்திர மாநில போலீசாருக்கு சி.பி.ஐ. அனுப்பி வைத்துள்ளதாகவும், ராமச்சந்திர ராவை உடனடியாகக் கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.