சென்னை அருகே தொழிற்சாலை போல் இயங்கிய சட்டவிரோத குடிநீர் ஆழ்துளை கிணறுகள் அகற்றம் - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஜே.சி.பி. வாகனங்களைக் கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை
Jul 22 2019 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு தொழிற்சாலைபோல் இயங்கிய ஆழ்துளை கிணறுகளை வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை போக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் சென்னைக்கு வினியோகம் செய்யபடுகிறது. ஆனால், குடிநீர் தட்டுப்பாட்டை சிலர் சாதகமாக்கி பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து, குடிநீரை திருடி வர்த்தக நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். மேலும் ஆழ்துளை கிணறுகளில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன மோட்டார்களையும் பறிமுதல் செய்தனர்.