வறட்சியால் பாதிக்கப்பட்ட நகரங்கள் தமிழகத்திலேயே அதிகம் உள்ளன - மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை ஆய்வில் தகவல்
Jul 8 2019 2:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில், வறட்சியில், தமிழக நகரப்பகுதிகள்தான் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், நாட்டில் உள்ள 855 மாவட்டங்களிலும், 756 நகராட்சி அமைப்புகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நகராட்சி அமைப்புகளை பொறுத்தவரை, 184 இடங்கள் வறட்சியின் பிடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மாவட்டங்களை பொறுத்தவரை, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில், 35 மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன. கர்நாடகாவில் 18 மாவட்டங்களும், 57 நகராட்சி அமைப்புகளும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளன. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற பகுதிகளை அடையாளம் கண்டுள்ள மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை, இந்த பகுதிகளில் நீர் சேமிப்பை ஊக்குவிக்க ஜல்சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.