மோசடி கருத்துக்கணிப்புகளை புறந்தள்ளிவிட்டு வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரங்களின் நெருக்கடி, தன்னாட்சி அமைப்புகளின் ஒருதலைபட்சமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக எத்தனையோ அஸ்திரங்கள் தேர்தல் சமயத்தில் ஏவப்பட்டதாகவும், அவற்றை எல்லாம் துணிச்சலுடனும், அம்மாவின் உண்மை விசுவாசிகளான கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடும் எதிர்கொண்டு, இந்தத் தேர்தல் களத்தை கழகம் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு காலம் தந்த வெற்றிச் சின்னமாம் பரிசு பெட்டகம் சின்னத்திற்கு தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பின்னணியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அபார வெற்றி என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை
வளைத்து, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்தவர்களே இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருப்பதாக திரு.டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
எவ்வளவோ அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தும் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்பது புரிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் அடுத்த புரட்டை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு மோசடி அம்பலமானதும், அந்தத் தொகுதியில் களத்திலேயே இல்லாத ஒரு கட்சிக்கு கிடைத்ததாக கூறப்பட்ட 6 சதவீத வாக்குகளை இரண்டு பிரதான கட்சிகளுக்கு பிரித்துப் போட்டிருக்கிறார்கள் - இது அடுத்த பித்தலாட்டம் என்றும், இதுபோன்ற மோசடிகளை மூலதனமாக வைத்து வெளியான இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை - நமது கழகத் தொண்டர்களும் இதைப் புறந்தள்ள வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும், ஆயிரக்கணக்கான இயந்திரங்களை மாற்றி வைக்கவும் நடக்கும் முயற்சிக்கு முன்னோட்டமாகவும், அதற்கு வசதியாகவும் இந்த கருத்துக்கணிப்பு வெளிவந்திருப்பதாக மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா
பானர்ஜி சொன்ன கருத்து புறம்தள்ள முடியாத ஒன்றாகும் என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை மனதில் வைத்து, வாக்கு எண்ணிக்கை நாளான
மே 23-ம் தேதி, ஒவ்வொரு மேஜையிலும் எண்ணப்படும் வாக்குகளை நமது முகவர்கள் சரிபார்த்து கையெழுத்திட்டு, மொத்தமாக ஒரு சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணைய அதிகாரி
அறிவிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் - எந்தச் சூழ்நிலையிலும் முந்தைய சுற்று முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்க அனுமதிக்கக் கூடாது என திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத ஆட்சியையும், துரோக கும்பலையும் விரட்டியடிக்கும் வகையில், மக்கள் நமக்களித்த ஏகோபித்த ஆதரவை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாளான மே 23 அன்று வெற்றிக்கொடி நாட்டப்போவது நாம்தான் என்றும் திரு.டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.