பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவ வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால் நீதிமன்ற கண்காணிப்புடன் சி.பி.ஐ. விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளை விரைவாகத் தண்டிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். விசாரணையைத் தொடர்வதில் ஏன் இத்தனை தாமதம்? என்றும் அவர் வினவியுள்ளார்.
திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள், தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த நிகழ்வு வெளியே வந்து, தமிழகத்தையே உலுக்கியதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் நெஞ்சமெல்லாம் பதறியதாக குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நடந்துவந்த இந்த வன்கொடுமை பற்றி வெளி உலகுக்குத் தெரிந்து சில மாதங்கள் கடந்த பின்பும், இந்த வழக்கு எந்த திசையில் செல்கிறது, இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பது புரியாமல் இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் பின்புலம் காரணமாக உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க ஆரம்பத்தில் முயற்சிகள் நடந்தன - அதற்கு போலீஸ் உயரதிகாரிகள் சிலரும் துணை போனார்கள் - இதனால் குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதால்தான் சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தப் பட்டதாக திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அடிப்படையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நாற்பது நாட்களுக்கு மேல் ஆகியும் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை - பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்று நடைமுறை இருந்தும், மாவட்ட எஸ்.பி.யே அந்தத் தவறை செய்தார் - அதே தவறை தமிழக அரசும் செய்தது - சி.பி.ஐ.க்கு விசாரணையை மாற்றி பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டது - அதைத் திருத்தி புதிய அரசாணை வெளியிடுங்கள் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும், இந்த வழக்கை முறைப்படி சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து விசாரணையைத் தொடர்வதில் ஏன் இத்தனை தாமதம் என்பது புரியவில்லை என திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை - அதுவரை இங்குள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திவரும் விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பதும் மர்மமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தாரும் உரிய நீதி கிடைக்காமல் எந்தளவுக்கு மனஉளைச்சலில் இருப்பார்கள் என்பதை நம்மால் உணரமுடிகிறது - ஆனால், அரசு இதைப்பற்றிக் கவலைப்படுகிறதா என்று தெரியவில்லை -
தனக்கு மேல் உள்ள ஐ.ஜி. அந்தஸ்திலான அதிகாரி, பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பெண் எஸ்.பி. ஒருவர் புகார் கொடுத்து ஓராண்டாகியும், அது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிந்து விசாரணை நடத்தாதது மட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரியை பெயரளவில் கூட பணியிட மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமியின் அரசு ஆர்வம் காட்டவில்லை என திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பில் இந்த அரசு காட்டும் அலட்சியம் வன்மையாக கண்டிக்கத்தக்கது - பொள்ளாச்சி சம்பவத்திலும் இப்படி அலட்சியமாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயலாமல், தற்போது அந்த வழக்கின் விசாரணை யார் வசம் இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் என்ன நடைமுறை சிக்கல்? என்பதை எல்லாம் தெளிவுபடுத்தி, காரணம் எதுவாக இருந்தாலும் விரைவான விசாரணைக்கு இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் அரசியல் பின்னணிகள் இருப்பதால் சி.பி.ஐ. நடத்தவுள்ள விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியதாகவும், அதை மீண்டும் வலியுறுத்தி, விசாரணையைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளை விரைவாகத் தண்டிக்க வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.