மேற்காசிய நாடுகளில் தொடர் யுத்தம் காரணமாக உலக உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் : சமீபத்திய ஆய்வில் பரபரப்பு தகவல்
Sep 12 2014 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்காசிய நாடுகளில் தொடர் யுத்தம் காரணமாக உலக உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உருவாகியுள்ளது. அங்கு காணப்படும் காட்டுத் தாவரங்களில் 21 சதவிகிதம் அழிவை சந்திக்க நேரிட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
புதிய உணவு வகைகள் தயாரிக்கத் தேவைப்படும் காட்டுப் பயிர்கள் அதிகளவில் விளையும் நாடுகளில், மத்திய கிழக்குப் பகுதிகளான சிரியா, லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை முக்கிய நாடுகளாகும்.
ஆனால் இந்தப் பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் யுத்தங்கள் நீடிக்குமேயானால் விரைவிலேயே உலகின் உணவுப் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக மாறும் அபாயம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் யுத்தங்கள் அந்தப் பகுதிகளில் வளர்க்கப்படும் வீட்டுப் பயிர்களில் மரபணு மேம்பாடுகளை ஏற்படுத்த உதவும் காட்டுப்பயிர்களின் வளங்களை அழிப்பவையாக உள்ளன. சமீபத்திய கணக்கெடுப்புகள் அங்கு காணப்படும் காட்டுத் தாவரங்களில் 21 சதவிகிதம் அழிவை சந்திக்க நேரிட்டுள்ளதாகக் கூறுகின்றன.
நைல், டைக்ரிஸ், யூப்ரடிஸ் போன்ற நதிகளால் சூழப்பட்டுள்ள வளமிக்க பகுதிகளான ஈராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகள் பயிர்களின் மரபணு மாற்றங்களுக்குப் பெரிதும் உதவி புரிகின்றன. ஆனால் தொடரும் உள்நாட்டு யுத்தங்கள் இந்த வளத்திற்கு அழிவைத் தேடித் தருவதாகவே அமைந்துள்ளது என்று பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.