திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 3 வயது சிறுவன் உயிரிழப்பு : சுகாதாரத்துறையின் அலட்சியமே காரணமென குற்றச்சாட்டு
Nov 15 2019 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே 3 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீடாமங்கலத்தை அடுத்த மேலபூவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான மகேந்திரன் - லதா தம்பதியின், 3 வயது சிறுவன் வசந்தகுமாருக்கு டெங்கு அறிகுறியுடன் காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 11-ம் தேதி, நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு டெங்கு காய்ச்சலுக்கு உரிய மருந்து இல்லாததால், தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் மாற்றப்பட்டான். அங்கு 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று சிறுவன் உயிரிழந்தான். மேலும் அக்குடும்பத்தில் உள்ள மற்ற 3 பேருக்கும் காய்ச்சல் இருந்து வருகிறது. இதுகுறித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்தும், சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காததே, சிறுவன் உயிரிழக்க காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, சுகாதாரத்துறையின் மெத்தன போக்கிற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையை அடுத்த குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், பேரூராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், விதிமுறைகளை மீறி குப்பை கொட்டிய லாரி சிறைபிடிக்கப்பட்டு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.