கஜா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் எதிரொலியாக நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்திலுள்ள 683 கிராமங்கள், 16 பேரூராட்சி, ஐந்து நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முன்னேற்பாடுகள் தயார்நிலையில் உள்ளதாக ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்றுமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார் மீனவ கிராம பஞ்சாயத்தார்களை சந்தித்த, அம்மாவட்ட ஆட்சியர் திரு.சுரேஷ்குமார், மீனவ கிராம மக்களை பாதுகாப்பான பகுதிக்குச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.
பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் தீவு பகுதிகளில் மழை நீர் தேங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ், மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாகதெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அச்சத்தை தீர்க்க அரசு முன் வரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவக் கிராமங்கள் உள்ளிட்ட 170 இடங்களில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், வெள்ளத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அரசு அதிகாரிகள் மற்றும் முதல்நிலை தன்னார்வலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கஜா புயல் எதிரொலியாக நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.