சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் வரும் 15-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடிப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பொதுமக்களின் உடைமைகள் போன்றவற்றையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு டெல்லியில் தனியார் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10-ம் தேதி ஆளில்லா குட்டிவிமானம் ட்ரோன் டெல்லி விமானநிலையம் அருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்ரோன் பறந்துள்ளதை அடுத்து டெல்லி பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உச்சகட்ட பாதுகாப்பு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை செயலகத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரதினத்தையொட்டி, அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபத்தையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாம்பன் ரயில்பாலத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மெட்டல்டிடெக்டர் மூலம் அங்குலம்அங்கலமாக சோதனை செய்தனர். பாலத்தில் இருபுறத்திலும் ஆயுதம் தாங்கிய போலீசார், 24 மணிநேரமும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும், காகிதத்தால் செய்யப்பட்ட தேசியக்கொடிகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் பொதுமக்கள் பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.