காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வலுத்து வரும் போராட்டங்கள் : விவசாய அமைப்புகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் உட்பட ஏராளமானோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம்
Apr 21 2018 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. விவசாய அமைப்புகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினர் உட்பட ஏராளமானோர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் வாசுதேவநல்லூர் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வாசுதேவநல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பாப்புலர் வி.முத்தையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சியில் அகில இந்திய உழவர் உழைப்பாளர் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில், ரயில்மறியல் போராட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் பேருந்துநிலையத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பேரணியாக வந்து திருச்சி ஜங்சன் ரயில்நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர், அப்போது அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தியதால் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து கண்டண கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். இனியும் இந்த அரசு தாதமதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் போராட்டத்தினை தீவிரப்படுத்துவோம் என்றும் எச்சரிக்கைவிடுத்தனர்.
புதுக்கோட்டை, இயற்கை விவசாய கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் அண்ணாசிலை, கீழராஜவீதி, வடக்குராஜவீதி, உள்ளிட்ட பகுதிகளில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராடினர்.