காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தல் - தஞ்சையில் விவசாயிகள் தரையில் படுத்து போராட்டம் - பா.ஜ.க அரசைக் கண்டித்து முழக்கம்
Mar 23 2018 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தின் போது, விவசாயிகள் காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தரையில் படுத்து போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க தொடர்ந்து தாமதித்து வருவதால், இதற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி திரு. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் திடீரென காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வருவாய் அதிகாரி அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், விவசாயிகள் சமாதானம் அடையாததால், காவல்துறையினர் விரைந்து சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில்
நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் புறக்கணித்தனர். காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கையில் திருவோடு மற்றும் சட்டியினை ஏந்தியபடி, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.