வீராணம் எரி வறண்டதால், சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம் - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் அச்சம்
Mar 23 2018 11:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை மக்கள்விரோத இபிஎஸ் நிர்வாகம் மேற்கொள்ளாததன் விளைவாக நீர்நிலைகள் வறண்டுள்ளன. வீராணம் ஏரி முற்றிலும் வறண்டதை அடுத்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி நீரை, விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் வகையிலும், புதிய வீராணம் திட்டத்தை மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வெற்றிகரமாக செயல்படுத்தினார். இதன்மூலம் சென்னை மாநகரின் குடிநீர்த் தேவை கடந்த பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரியில் கீழணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும், போதிய மழை இல்லாததாலும், வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டவில்லை. ஏரியில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால் சென்னைக்கு வினாடிக்கு 19 கன அடி நீர் அனுப்பப்பட்டது. தற்போது ஏரி வறண்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மக்கள்விரோத இ.பி.எஸ் நிர்வாகம் மேற்கொள்ளாததால் தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகள் வறண்டு கிடப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், இபிஎஸ் நிர்வாகத்தின் அலட்சியப்போக்கால் சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.