காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு : மேகதாது உட்பட, காவேரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம்
Feb 25 2017 8:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது உட்பட, காவேரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது என பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் அம்மாநில அரசு, காவேரி ஆற்றின் குறுக்கே, 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் மற்றும் நீர்மின் உற்பத்தி திட்டம் தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையம், உச்சநீதிமன்ற மேற்பார்வைக்குழு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அனுமதி கோரியிருப்பதாக வெளியான தகவல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
காவேரி நதிநீர் பிரச்சனையில் காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநில அரசுகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதும், காவேரி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டங்கள் தொடர்பாக கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருப்பதும் இக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட காவேரி நீர்ப்பாச மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல், காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அருகே அணைகட்டும் கர்நாடக அரசின் ஒருதலைபட்சமான செயல், காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது - தமிழக மக்கள் நலனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கான தொழில்நுட்ப-பொருளாதார அனுமதி உட்பட கர்நாடக அரசின் எந்தவொரு அணைகட்டும் திட்டத்திற்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என மத்திய நீர்வள ஆணையத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் - காவேரி நதிநீர் பாயும் அனைத்து மாநில அரசுகளின் ஒப்புதல் பெறுவது, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரிநதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை நடைமுறைக்கு வருதல் மற்றும் காவேரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் வரை, கர்நாடக அரசின் எந்தவொரு புதிய திட்டத்திற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் மின்சாரம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், குடிநீர், சுகாதாரம் ஆகிய துறைகளுக்கும் இதே உத்தரவை பிரதமர் பிறப்பிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி தனது கடிதத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.